புதுடெல்லி:
தமிழகத்தைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் வி.மோகனா உட்பட 5 பேர் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நேற்று பதவி ஏற்றனர்.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலைமையில் மே 22, 27-ம் தேதிகளில் கொலிஜீயம் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், பஞ்சாப் - ஹரியானா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஷீல் நாகு, மும்பை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசேகர், மத்திய பிரதேச உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் சச்தேவா, ஜம்மு காஷ்மீர் லடாக் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அருண் பல்லி, உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் வி.மோகனா ஆகியோரை உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க மத்திய அரசுக்கு கொலிஜீயம் பரிந்துரை செய்தது.
கொலிஜீயத்தின் பரிந்துரைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து 5 பேரையும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்றத்தில் நேற்று நடைபெற்ற விழாவில் ஐந்து புதிய நீதிபதிகளுக்கு தலைமை நீதிபதி சூர்ய காந்த் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
அவர்களில் நீதிபதி மோகனா தமிழகத்தின் கோவையை சேர்ந்தவர் ஆவார். புதிய நீதிபதிகளுடன் சேர்த்து, தலைமை நீதிபதி நீங்கலாக உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 37 ஆக உயர்ந்துள்ளது.