ஹைதராபாத்:
வரும் 2028ல் நடைபெறும் தேர்தலில் தெலங்கானாவில் ஜனசேனா போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைவர் பவன் கல்யாண் கூறினார்.
தெலங்கானா மாநிலத்தின் 13-வது உதய தினம் நேற்று வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. தெலங்கானா உதயமான நாளை கொண்டாட ஜனசேனா கட்சி ஹைதராபாத்தில் பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தது.
ஆனால் சட்டம் ஒழுங்கு பிரச்சினையை காரணம் காட்டி தெலங்கானா போலீஸார் இதற்கு அனுமதி தர மறுத்துவிட்டனர். இதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை அவசர மனுவாக விசாரிக்க ஹைதராபாத் உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது. இதனால் பொதுக் கூட்டம் ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில் ஜனசேனா கட்சியின் தலைவரும் ஆந்திர துணை முதல்வருமான பவன் கல்யாண், ஹைதராபாத்தில் உள்ள தனது வீட்டில் செய்தியாளர்களிடம் பேசியதாவது: தெலங்கானா மாநிலம் பிரிக்கப்பட்டபோது, பிரித்த விதம் தவறு என்றுதான் கூறினேன். பிரிக்கப்பட்டது தவறல்ல. சண்டை போடாமல் அண்ணன், தம்பி போல் பிரிந்து விடலாம் என்றுதான் கூறினேன்.
அதற்காக நான் தெலங்கானாவுக்கு வரக்கூடாதா ? தீவிரவாதத்தை விட மோசமானது பிராந்தியவாதம். அதாவது மொழி, மாநிலம் என பிரிந்து கிடப்பது, மற்றவர்கள் உள்ளே வர முடியாமல் தடுப்பது மிக கொடுமையானது. உங்கள் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி போன்றோர், தென் மாநிலங்களில் எங்கு வேண்டுமானாலும் போட்டியிடலாம்.
ஆனால் நாங்கள் இங்கு ஒரு கூட்டம் கூட நடத்தக்கூடாது என்பது என்ன நியாயம் ? நான் இதுவரை தெலங்கானாவில் போட்டியிட வேண்டும் என நினைக்கவில்லை. ஆனால் இப்போது சொல்கிறேன். வரும் 2028ம் ஆண்டு தெலங்கானா தேர்தலில் ஜனசேனா கட்சி கண்டிப்பாக போட்டியிடும். அது தனித்து போட்டியா ? அல்லது ஆந்திரா போல கூட்டணி அமைத்து போட்டியா என்பது பிறகு தெரியவரும். இவ்வாறு பவன் கல்யாண் கூறினார்.