பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, அரசியலை விட மக்கள் உடல்நலமே தற்போது முக்கியம் என வலியுறுத்தியுள்ளார்.
கோவை
பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, அரசியலை விட மக்கள் உடல்நலமே தற்போது முக்கியம் என வலியுறுத்தியுள்ளார். கோவையில் தனியார் மருத்துவமனையின் புதிய மருத்துவ வளாகத்தை திறந்து வைத்த அவர், நோய் வருவதற்கு முன்பே தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதன் அவசியத்தை எடுத்துரைத்தார்.
'வி தி லீடர்' அமைப்பை அரசியல் இயக்கமாக மாற்றுவதாக அறிவித்த பிறகு, பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை முதன்முறையாக கோவைக்கு வருகை தந்தார். பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் அவர், தனது பயணத்தின் முதல் நிகழ்வாக சிங்காநல்லூரில் அமைந்துள்ள என்.ஜி. மருத்துவமனையின் புதிய மருத்துவ வசதிகள் கொண்ட வளாகத்தை திறந்து வைத்தார்.நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, அரசியல் தொடர்பான கேள்விகளுக்கு பதிலளிக்காமல், உடல்நலம் மற்றும் மருத்துவம் தொடர்பான கருத்துகளை மட்டும் பகிர்ந்துகொண்டார்.
உணவுப் பொருட்களின் தரக்கட்டுப்பாடு முழுமையாக மக்களின் கையில் இல்லை என்பதால், ஆரோக்கியமான உணவுப் பழக்கவழக்கங்களை பின்பற்றாத சூழலில் பல்வேறு நோய்களுக்கு ஆளாகும் நிலை உருவாகியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
மேலும், நோய் வந்த பிறகு சிகிச்சை பெறுவதை விட, வருமுன் காத்துக்கொள்வதே சிறந்த மருத்துவ அணுகுமுறை என்றும், அதனை வலியுறுத்தும் வகையில் நவீன மருத்துவ வசதிகளுடன் கூடிய இந்த புதிய வளாகத்தை திறந்து வைக்க வந்துள்ளதாகவும் அண்ணாமலை கூறினார்.