தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள கூட்டுறவு பயிர் கடன் தள்ளுபடி விவசாயிகளுக்கு மிகப்பெரிய ஏமாற்றம் - முதல்வர் விஜய் அவர்கள் விவசாயிகளுக்கு தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிபடி கடன் தள்ளுபடியை அறிவித்திட கோரிக்கை:
அன்புடையீர்,
தமிழ்நாடு முதல்வர் C.ஜோசப் விஜய் அவர்களை நம்பி வாக்களித்த தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு இன்று (25.05.2026) ஒரு பெருத்த ஏமாற்றமான நாளாக அமைந்திருக்கிறது.
தொடர்ச்சியாக விவசாயத்தில் ஏற்பட்ட நஷ்டத்தால் கடனை கட்ட முடியாமல் விவசாயிகள் தவித்துக்கொண்டிருந்தபோது, நான் ஆட்சிக்கு வந்தால் சிறு-குறு விவசாயிகளுக்கு பயிர் கடனை முழுமையாகவும், பெரு விவசாயிகளுக்கு 50% தள்ளுபடி செய்வேன் என முதல்வர் C.ஜோசப் விஜய் அவர்கள் தன்னுடைய தேர்தல் அறிக்கையில் வாக்குறுதியாக கொடுத்துவிட்டு, இது வாக்குறுதி அல்ல உத்தரவாதம் எனவும் தெரிவித்துவிட்டு, விவசாயிகளின் வாக்குகளை பெற்று ஆட்சிக்கு வந்த பின்பு தற்போது ஒரு மிகப்பெரிய ஏமாற்று திட்டத்தை விவசாயிகளுக்காக வெளியிட்டுள்ளார்.
ஒரு ஏக்கர் கரும்பிற்கு பயிர் கடனாக சராசரியாக ரூபாய் 60 ஆயிரமும், நெல்லுக்கு ஒரு ஏக்கருக்கு ரூபாய் 36,000 ஆயிரமும் வழங்கப்படுகிறது. இரண்டு ஏக்கர் கரும்பிற்கு பயிர் கடன் பெற்று இருந்தால் விவசாயிகளுக்கு கிடைப்பது வெறும் ரூபாய் 5000 மட்டுமே, மூன்று ஏக்கர் நெல்லுக்கு பயிர் கடன் பெற்றிருந்தால் விவசாயிகளுக்கு கிடைப்பது வெறும் 5000 மட்டுமே, இதற்கு பெயர் பயிர் கடன் தள்ளுபடி அல்ல !!
கடந்த 2021இல் தமிழ்நாடு அரசு தள்ளுபடி செய்த பயிர் கடன் தொகை ரூபாய் 12,000 கோடி, அதற்கு முன்பு தள்ளுபடி செய்யப்பட்ட தொகை ரூபாய் 7,000 கோடி, தற்போது தள்ளுபடி செய்யப்பட்டுள்ள கடனின் அளவு வெறும் 2,000 கோடி மட்டுமே. விஜய் ஆட்சிக்கு வருவார், மக்களுக்கு நல்லது செய்வார், விவசாயிகளை காப்பாற்றுவார் என பயிர் கடனை கட்ட முடியாமல் கடனிலிருந்த விவசாயிகள், பெரும் நம்பிக்கையோடு காத்திருந்து, தற்போது அபராத வட்டியையும் சேர்த்து திருப்பி செலுத்த வேண்டிய சூழ்நிலையால் தமிழ்நாட்டு விவசாயிகள் இன்று மிகப்பெரிய அதிர்ச்சியிலும், ஏமாற்றத்திலும், மன வேதனையிலும் உள்ளார்கள்.
தமிழ்நாட்டின் நிதி நிலைமை சிரமத்தில் இருப்பதாக சொல்வது என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது, தமிழ்நாட்டுக்கு அனுமதிக்கப்பட்ட வரம்பிற்கு உட்பட்ட அளவிற்குதான் கடன் பெறப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு பெற்றுள்ள கடன் தொகை என்பது அனைவரும் அறிந்ததே, தற்போது ஒன்றும் புதியதாக தெரிய வருவது அல்ல. மேலும் மத்திய அரசு கடன் தள்ளுபடி திட்டத்திற்காக அறிவிக்கப்படும் தொகைகள் இரண்டு மாதத்திற்குள் செலுத்த வேண்டும் என உத்தரவிட்டு இருப்பதாக தெரிவித்திருப்பது பொருத்தமானது அல்ல, மாநில கூட்டுறவு சங்கங்களுக்கு மாநில அரசுகள் எடுக்கும் முடிவே பொருந்தும் என்பதை பலமுறை உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்திய பின்பும், விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் மத்திய அரசை காரணம் காட்டி இருப்பது தவறான முன் உதாரணமாகும்.
எனவே மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் C.ஜோசப் விஜய் அவர்கள் விவசாயிகளுக்கு எவ்விதத்திலும் பயனளிக்காத இந்த பயிர் கடன் தள்ளுபடி திட்டத்தை ரத்து செய்து, விவசாயிகளுக்கு அளித்த உத்தரவாதமான சிறு - குறு விவசாயிகளுக்கு பயிர் கடன்கள் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்பதையும், பெரு விவசாயிகளுக்கு 50 சதவீதம் தள்ளுபடி செய்யப்படும் என்பதையாவது குறைந்தபட்சம் அறிவித்து செயல்படுத்திட வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம்.
தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் வருகிற ஜூன் 1ஆம் தேதி திங்கட்கிழமை அன்று தமிழ்நாடு முழுவதும், அனைத்து மாவட்டங்களிலும் தமிழக வெற்றிக் கழகம் விவசாயிகளுக்கு அளித்த உத்தரவாதத்தின்படி கடன் தள்ளுபடி திட்டத்தை அறிவித்து செயல்படுத்த வேண்டுமென ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.
இப்படிக்கு
வழக்கறிஞர் ஈசன் முருகசாமி
நிறுவனர்
தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம்