தமிழகத்தின் உள்ளூர் செய்திகள், மாவட்ட நிகழ்வுகள் மற்றும் மாநில அரசின் செயல்பாடுகள்.
தமிழகத்தில் சீரழிந்து கொண்டிருக்கும் சட்டம் - ஒழுங்கின் மீது கூடுதல் கவனம் செலுத்திட வேண்டும் - தினகரன்!!
சென்னை:
‘கோடம்பாக்கம் அருகே 16 வயது சிறுவனுக்கு பாலியல் ரீதியில் தொல்லை கொடுத்த தலைமைக் காவலர் கைது செய்யப்பட்டுள்ளார். முதல்வர் விஜய் காவல் அதிகாரிகளுடன் நடத்தும் ஆலோசனைக் கூட்டங்களும், அதிகாரிகளுக்கு அவர் போடும் உத்தரவுகளும் துளியளவும் செயல்பாட்டுக்கு வருவதில்லை என்பதை அன்றாடம் அரங்கேறும் குற்றச் சம்பவங்களே சாட்சியாக அமைந்துள்ளன’ என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்தார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘சென்னை கோடம்பாக்கம் பகுதியில் 16 வயது சிறுவனின் வாயில் மதுவை ஊற்றி பாலியல் தொந்தரவு கொடுத்ததாகத் தலைமைக் காவலர் ஒருவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருப்பதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.
தமிழகத்தில் குழந்தைகளுக்கு எதிரான குற்றச் சம்பவங்களைத் தடுத்து நிறுத்தி அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய பொறுப்புமிக்க காவல்துறையில் பணியாற்றும் காவலரே இத்தகைய மனிதநேயமற்ற செயலில் ஈடுபட்டிருப்பது ஒட்டுமொத்த காவல்துறைக்கும் பெரும் இழுக்கை உண்டாக்கியுள்ளது.
சட்டம் - ஒழுங்கு பிரச்சினைகள், குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பு தொடர்பாக முதல்வர் ஜோசப் விஜய் காவல் அதிகாரிகளுடன் நடத்தும் ஆலோசனைக் கூட்டங்களும், அதிகாரிகளுக்கு அவர் போடும் உத்தரவுகளும் துளியளவும் செயல்பாட்டிற்கு வருவதில்லை என்பதை அன்றாடம் அரங்கேறும் குற்றச் சம்பவங்களே சாட்சியாக அமைந்துள்ளன.
எனவே, தன்னுடைய பொறுப்பையும் கடமையையும் மறந்து சிறுவனுக்கு பாலியல் ரீதியாகத் தொல்லை கொடுத்ததாகக் கைதாகியிருக்கும் தலைமைக் காவலர் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, தமிழகத்தில் சீரழிந்து கொண்டிருக்கும் சட்டம் - ஒழுங்கின் மீது கூடுதல் கவனம் செலுத்திட வேண்டும் என தவெக அரசை வலியுறுத்துகிறேன்.
சென்னை: டெல்லி பயணத்தை முன்கூட்டியே முடித்துக் கொண்டு சென்னை திரும்பிய முதல்வர் விஜய்!!டெல்லி பயணத்தை முன்கூட்டியே முடித்துக் கொண்டு முதல்வர் விஜய் நேற்று சென்னை திரும்பினார். முன்னதாக திட்டமிடப்பட்ட சோனியா, ராகுல் சந்திப்பு ரத்து செய்யப்பட்டதால் அரசியலில் அது பெரும்விவாதப் பொருளாக மாறியுள்ளது.
நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக 108 இடங்களில் வெற்றி பெற்றது. ஆட்சி அமைக்க பெரும்பான்மை கிடைக்காததால் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விசிக, ஐயுஎம்எல் கட்சிகளின் ஆதரவுடன் விஜய் முதல்வராக பதவியேற்றார். இப்படியான அரசியல் திருப்பங்களுக்கிடையே முதல்வர் விஜய் நேற்று முன்தினம் டெல்லி சென்றார். இது அவரது முதல் டெல்லி பயணம் என்பதால், தேசிய அளவில் இது உன்னிப்பாகக் கவனிக்கப்பட்டது.
சென்னையில் இருந்து தனி விமானத்தில் 27-ம் தேதி மதியம் டெல்லி சென்றடைந்த விஜய்க்கு, தமிழக அரசு விருந்தினர் இல்லத்தில் தமிழக காவல்துறை சார்பில் முறைப்படியான அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. அன்றைய தினம் மாலை 4.30 மணியளவில் நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் நரேந்திர மோடியை விஜய் சந்தித்துப் பேசினார்.
பிரதமரைத் தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை விஜய் சந்திப்பதாக இருந்தது. ஆனால், கடைசி நேரத்தில் அந்த சந்திப்பு நடைபெறவில்லை. அதையடுத்து விஜய் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து தமிழகத்துக்கான திட்டங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்நிலையில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர்களான சோனியா, ராகுல், மல்லிகார்ஜூன கார்கே ஆகியோரையும் விஜய் சந்திப்பார் என்ற தகவல் வெளியானது.
இதனால் சோனியாவின் இல்லத்தைச் சுற்றிலும் முதல்வர் விஜய்யை வரவேற்று பிரம்மாண்ட பதாகைகளும் வைக்கப்பட்டிருந்தன. ஆனால் திடீரென காங்கிரஸ் தலைவர்களுடனான சந்திப்பு ரத்தானது. முன்னதாக கேரளாவின் புதிய காங்கிரஸ் முதல்வராக சதீஷன் பதவியேற்கும் விழாவில் விஜய் பங்கேற்பதாக இருந்த திட்டம் திடீரென ரத்தான நிலையில், டெல்லியில் காங்கிரஸ் தலைவர்களை விஜய் சந்திக்க இருந்த திட்டமும் ரத்தானது இது கட்சி நிர்வாகிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இப்படியான சூழலில் நேற்று காலை 10 மணியளவில் டெல்லி பயணத்தை முன்கூட்டியே முடித்துக்கொண்டு தனி விமானத்தில் விஜய் சென்னை திரும்பினார்.
முன்னதாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். வழக்கமாக கருணாநிதி, ஜெயலலிதா, ஸ்டாலின், பழனிசாமி உள்ளிட்ட முன்னாள் முதல்வர்கள் டெல்லி சென்று பிரதமரை சந்தித்தால் தமிழ்நாடு அரசு விருந்தினர் இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்திப்பது வழக்கம். ஆனால் விஜய் செய்தியாளர்கள் சந்திப்பையும் தவிர்த்தது பேசுபொருளானது.
இதுகுறித்து சென்னை தலைமைச் செயலக வட்டாரங்கள் கூறியதாவது: பிரதமர் மோடியுடனான விஜய்யின் சந்திப்பு சுமார் 10 நிமிடங்கள் நீடித்தது. இந்த சந்திப்பின்போது நெதர்லாந்தில் இருந்து வரலாற்றுச் சிறப்புமிக்க சோழர் காலத்தைச் சேர்ந்த ஆனைமங்கலம் செப்புப் பட்டயங்களை மீட்டுக் கொண்டு வர வழிவகை செய்ததற்காகப் பிரதமருக்கு விஜய் நன்றி தெரிவித்தார்.
மேலும் காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு திட்டமிட்டுள்ள மேகேதாட்டு அணைத் திட்டத்தால் தமிழக விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் விவரித்தார். இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ச்சியாக கைது செய்யப்படுவதற்கு நிரந்தரத் தீர்வு காண வலியுறுத்தினார். அரசு விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவது தொடர்பாக அண்மையில் எழுந்த சர்ச்சை குறித்து பேசினார்.
தமிழகத்தில் விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையம் மற்றும் பாதுகாப்புத் துறை சார்ந்த வான்வழி உள்கட்டமைப்புகளை நிறுவக் கோரியும் பிரதமரிடம் கோரிக்கை விடுத்தார். அமித் ஷாவுக்கு அவசர அலுவல் பணிகள் இருந்ததால் விஜய்யை சந்திக்கவில்லை. ஆனால் காங்கிரஸ் மூத்த தலைவர்களை சந்திக்காமல் சென்னைக்கு திரும்பியதில் பல்வேறு அரசியல் காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன.
காவிரி விவகாரம் மற்றும் தமிழகத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பின்போது எழுந்த குதிரை பேர சர்ச்சைகள், கர்நாடக காங்கிரஸில் வெடித்துள்ள உள்கட்சி பிரச்சினை போன்றவற்றால் இப்போது காங்கிரஸ் தலைவர்களைச் சந்தித்தால் அது தேவையற்ற விவாதங்களை உருவாக்கும் என்பதால் விஜய் இந்தச் சந்திப்பைத் தவிர்த்ததாக ஒருதரப்பில் தகவல்கள் கூறப்படுகின்றன. ஆனால் மற்றொரு தரப்போ காங்கிரஸ் தலைவர்களுடனான சந்திப்பு நடைபெறாததற்கு பின்னணியில் சில அரசியல் அழுத்தங்களும் இருக்கலாம் என்கிறார்கள். இவ்வாறு தெரிவித்தனர்.
காரணம் என்ன? - இந்தச் சர்ச்சை குறித்து காங்கிரஸ் எம்.பி. கிறிஸ்டோபர் திலக் கூறியதாவது: இதனை தமிழக முதல்வர் ஒரு அரசுமுறைப் பயணமாக மட்டுமே வைத்திருக்க விரும்பியிருக்கலாம். அதனால்தான் பிரதமரை மட்டும் சந்தித்துவிட்டுத் திரும்பியுள்ளார். ஜூன் 11-ம் தேதி முதல்வர் மீண்டும் டெல்லி வரவுள்ளார். அப்போது நிச்சயமாக சோனியா, ராகுலைச் சந்திப்பார்.
தற்போது ஜார்கண்ட் மாநிலங்களவை சீட், கர்நாடகாவில் முதல்வர் தேர்வு உள்ளிட்ட விஷயங்கள் குறித்து விவாதிப்பதற்காக அந்த மாநில காங்கிரஸ் தலைவர்கள் டெல்லி வந்துள்ளனர். கடந்த இரண்டு நாட்களாக இந்த விவாதங்கள் சோனியா இல்லத்தில் தீவிரமாக நடந்து வருவதால், தமிழக முதல்வருடன் விரிவாக அமர்ந்து பேசுவதற்கான நேரமும் வாய்ப்பும் காங்கிரஸ் தலைவர்களுக்குக் குறைவாக இருந்தது. இதில் யோசிப்பதற்கோ அல்லது எதிர்மறையாக நினைப்பதற்கோ எதுவும் இல்லை. நாங்கள் தவெக கூட்டணியில் நீடிக்கிறோம், அமைச்சரவையிலும் இருக்கிறோம்.
எனவே, நாங்கள் சந்திப்பதில் எந்தச் சிக்கலும் இல்லை. விஜய் முதல்வராக பதவியேற்றபோது ராகுல்தான் முதல் ஆளாக வந்து பங்கேற்றார். சோனியா காந்தி இல்லத்தில் முதல்வருக்கு விருந்து கொடுக்கத் திட்டமிடப்பட்டிருக்கலாம். ஆனால், காங்கிரஸ் தலைமை சில முக்கிய உள்கட்சி முடிவுகளை எடுக்க வேண்டியிருந்ததால், அது அடுத்த முறைக்குதள்ளிவைக்கப்பட்டிருக்கலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
YOUTUBE - களம் TV : சமீபத்திய வீடியோக்கள்
- கோவை சிஐடி கல்லூரியில் சர்வதேச தூய்மை எரிசக்தி மற்றும் சுகாதார தொழில்நுட்ப மாநாடு தொடக்கம்
- 🎉முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்தநாள் விழா! 🍬 நா. கார்த்திக் தலைமையில் இனிப்புகள் வழங்கல்!
- கலைஞர் கருணாநிதியின் 103-வது பிறந்தநாளை முன்னிட்டு திமுக சார்பில் திருவுருவப் படத்திற்கு மலரஞ்சலி
- முத்தமிழறிஞர் கலைஞரின் பிறந்த நாளை ஒட்டி கலைஞரின் திருவுருவ படத்திற்கு மலர் அஞ்சலி
- முத்தமிழறிஞர் கலைஞரின் பிறந்தநாளையொட்டி கோவையில் திமுக சார்பில் மலரஞ்சலி!
- ஜே.இ.இ அட்வான்ஸ்டு (JEE Advanced) 2026 தேர்வில் ஸ்ரீ சைதன்யா பள்ளி மாணவர்கள் அசத்தல் சாதனை
- எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக முழக்கங்கள் எழுப்பி உற்சாக வரவேற்பளித்த தொண்டர்கள்..!
- கோவையில் எடப்பாடி பழனிச்சாமிக்கு உற்சாக வரவேற்பு
- கோவை விமான நிலையத்தில் எடப்பாடி பழனிச்சாமிக்கு உற்சாக வரவேற்பு #aiadmk #viral #tvk
- இஸ்லாமியர்களுக்கு வழங்கப்பட்டு வரும் 3.5 சதவீதம் இட ஒதுக்கீட்டை 5 சதவீதமாக உயர்த்த கோரிக்கை